×

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் விபத்து, ஒலி, மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும்; கலெக்டர் பிரதாப் வேண்டுகோள்

திருவள்ளூர், அக்.18: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு 2018ம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகை என்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி உள்ளது. இந்த, ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று கடந்த ஆண்டை போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மாவட்ட அளவில் உச்சநீதிமன்ற ஆணையின்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில்கொண்டு பொதுமக்கள் கீழ்க்கண்டவற்றை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெளிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

மேலும், அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். எனவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து, இந்த தீபாவளியை மாசற்ற தீபாவளியாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Diwali ,Tiruvallur district ,Collector ,Prathap ,Tiruvallur ,Supreme Court ,Tamil Nadu government ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு