×

ராமஜெயம் கொலை வழக்கு சூடுபிடிக்கிறது 20 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு: சிபிசிஐடி டிஜிபி இன்று திருச்சி வருகை

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கு விவகாரத்தில், இறுதிபட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, சிபிசிஐடி டிஜிபி இன்று திருச்சி வர உள்ளார். திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012 மார்ச் 29ம்தேதி காலை நடை பயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி கல்லணை சாலையில் உள்ள காவிரி கரையோரம் கை, கால்கள் இரும்பு கம்பியால் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, ஸ்ரீரங்கம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போதைய, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி ராமஜெயம் மனைவி லதா, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். சிபிசிஐடி விசாரணையில் சரிவர துப்பு கிடைக்காததால் ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சிபிஐக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், கொலையாளிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. சிபிஐ விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என்று ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து, ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு தனிப்படை எஸ்பி ஜெயக்குமார், டிஎஸ்பி மதன், இன்ஸ்பெக்டர் ஞானவேல் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவினர் வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், ராமஜெயம் கொலை தொடர்பாக சிறையில் உள்ள கைதிகள், குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சிறைக்கு வெளியில் உள்ளவர்கள், ராமஜெயம் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து அந்த சமயத்தில் செல்போனில் பேசியவர்கள் என 1400க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், இவ்வழக்கில் 20 பேர் அடங்கிய இறுதிபட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் இன்று திருச்சி வர உள்ளதாக கூறப்படுகிறது….

The post ராமஜெயம் கொலை வழக்கு சூடுபிடிக்கிறது 20 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு: சிபிசிஐடி டிஜிபி இன்று திருச்சி வருகை appeared first on Dinakaran.

Tags : Ramajayam ,CBCID DGP ,Trichy ,
× RELATED திருச்சியில் பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்