சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.23 லட்சம் மதிப்புள்ள பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து நேற்று அதிகாலை கொழும்பு செல்லும் விமானம் புறப்படத் தயாராக இருந்தது, அப்போது சென்னையை சேர்ந்த சுல்தான் (29), இம்ரான் (32) ஆகிய இருவர் சுற்றுலாப்பயணிகளாக கொழும்பு செல்லவந்தனர். சந்தேகமடைந்த அதிகாரிகள் இருவரையும் தனிஅறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக சோதனை நடத்தினர். அப்போது இருவருடைய உள் ஆடைகளுக்குள் கட்டுக்கட்டாக சவுதியின் ரியாத் பணம் மறைத்துவைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ரியாத்தின் இந்திய மதிப்புப்படி அது ரூ 14 லட்சம் ஆகும்.
அந்த பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் அவர்களை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சென்னை வருகைப் பகுதியில் உள்ள கன்வேயர்பெல்ட் அருகே ஒரு வெள்ளை நிற கைப்பை கேட்பாரற்றுகிடந்தது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கைப்பையை எடுத்து திறந்து பார்த்து சோதனை நடத்தினர். அந்த கைப்பையில் 3 தங்க கட்டிகள் கருப்பு பேப்பரில் சுற்றி மறைத்துவைக்கப்பட்டிருந்தன. அதன் மொத்த எடை 300 கிராம். அதன் மதிப்பு ரூ.9 லட்சம்.இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகளிட்ம ஒப்படைத்தனர். சென்னை விமான நிலையத்தில் ரூ.23 லட்சம் மதிப்புடைய தங்கம் மற்றும் வெளிநாட்டு பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!