×

மானாமதுரை- ராமநாதபுரம் இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் : ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

மதுரை: மானாமதுரை – ராமநாதபுரம் இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இதனை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். மதுரையிலிருந்து மானாமதுரை வரை சுமார் 47 கி.மீ. தூர ரயில் பாதை ஏற்கனவே மின்மயமாக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில், மானாமதுரை-ராமநாதபுரம் இடையே 60 கி.மீ. தூர ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இந்த பாதையை நேற்று பெங்களூரு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் நேற்று ரயிலில் சென்று ஆய்வு செய்தார். மானாமதுரையில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்பட்ட ஆய்வு ரயிலில் சென்றவர், செல்லும் வழியில் சூடியூர் மற்றும் சத்திரக்குடி ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டிருந்த உப மின் நிலையங்களையும் திறந்து வைத்து ஆய்வு செய்தார். சூடியூர் அருகே மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை மேலே குறுக்கிடும் 400 கிலோவாட் மின் வழித்தடம், கமுதக்குடி ரயில்வே மேம்பாலம், பரமக்குடி அருகே உள்ள ரயில்வே கேட், சர்க்கரை கோட்டை கண்மாய் கால்வாய் ரயில் பாலம் ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். ரயில் மின் வழித்தடத்தில் ரயில்களை இயக்க 25,000 வாட்ஸ் மின்சாரம் பாய்ச்சப்படுவதால் பொதுமக்கள், ரயில் பயணிகள் மின் வழி தடத்தை நெருங்க வேண்டாம் என எச்சரிக்கை விளம்பர பலகைகள் இருக்கிறதா எனவும் ஆய்வு செய்தார். இந்த ரயில் மதியம் 2.45 மணியளவில் ராமநாதபுரம் சென்று சேர்ந்தது. ஆய்வின்போது முதன்மை மின்சார பொறியாளர் மேத்தா, முதன்மை மின்மயமாக்கல் திட்ட பொறியாளர் சமீர் டிகே, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.மாலையில் ராமநாதபுரம்-மானாமதுரை புதிய மின் வழித்தடத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ராமநாதபுரத்தில் மாலை 3.55 மணிக்கு புறப்பட்ட மின்சார ரயில் மாலை 4.45 மணிக்கு மானாமதுரை வந்து சேர்ந்தது.ஆய்வின்போது மவுன அஞ்சலிதியாகிகள் தினம் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு காலை 11 மணி முதல் காலை 11.02 மணி வரை சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் காரணமாக காலை 10.45 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்பட்ட பாதுகாப்பு ஆணையர் ஆய்வு ரயில் மானாமதுரை – சூடியூர் ரயில் நிலையங்களுக்கு இடையே நடு வழியில் காலை 11.00 மணிக்கு நிறுத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் உள்பட உயர் அதிகாரிகள், ஊழியர்கள் 2 நிமிடம் மவுனம் அனுசரித்தனர்….

The post மானாமதுரை- ராமநாதபுரம் இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் : ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Ramanathapuram ,Railway Safety Commissioner ,Madurai ,Railway ,Safety Commissioner ,Dinakaran ,
× RELATED எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத...