×

பெண் காவலர் குறித்து செய்தியை பரப்ப வேண்டாம்: மதுரை மாநகர் போலீசார் கோரிக்கை

 

மதுரை, அக். 7: மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மதுரை மாநகர் தல்லாகுளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிவகங்கை பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் தென் மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்திற்கு தபால் பணியாக வந்தார். வந்த இடத்தில் குடும்ப பிரச்னையால் அவருடைய கணவர் கைகளால் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.

மதுரை மாநகர காவல் துறை விசாரணையில் மேற்படி பெண் காவலர் சிவகங்கை மாவட்டத்தில் காவலராக பணிபுரிவதும் மதுரை ஆரப்பாளையத்தில் அவரது கணவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதும் தெரிந்தது. அன்றைய தினம் அவர்களுக்குள் பணப்பிரச்சினை சம்பந்தமாக பெண் காவலரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது விளையாட்டாக கையால் அடித்ததை யாரோ ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார் என தெரியவருகிறது.

அந்த பெண் காவலருக்கும் அவரது கணவருக்கும் இடையே எந்த விதமான சண்டையோ சச்சரவோ இல்லை. அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகவும் இது சம்பந்தமாக பெண் காவலர் புகார் ஏதும் கொடுக்க விரும்பவில்லை என்பது காவல்துறை விசாரணையில் தெரியவருகிறது. எனவே கணவன் மனைவி இடையே நடந்த குடும்ப பிரச்னையை சமூக வலைத்தளங்களில் மேலும் பரப்ப வேண்டாம் என மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

The post பெண் காவலர் குறித்து செய்தியை பரப்ப வேண்டாம்: மதுரை மாநகர் போலீசார் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madurai Metropolitan Police ,Madurai ,Commissioner ,Loganathan ,Sivaganga ,Dallakulam ,South Zone Police ,
× RELATED ஆந்திரா மாநில துணை முதல்வர் பவன்...