×

பதவியை ருசித்தவர்கள் பதுங்கிக்கொண்டனர் விரக்தியின் விளிம்பில் அதிமுக வேட்பாளர்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 10 ஆண்டுகாலமாக பதவியை ருசித்தவர்கள் நகர்ப்புற தேர்தலில் பதுங்கிக்கொண்டதால், வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் திக்குத்தெரியாமல் கலக்கம் அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகளில் 123 வார்டுகளிலும், செங்கம், கீழ்ெபன்னாத்தூர், வேட்டவலம், போளூர், புதுப்பாளையம், கண்ணமங்கலம், களம்பூர், சேத்துப்பட்டு, தேசூர், பெரணமல்லூர் ஆகிய 10 பேரூராட்சிகளில் 149 வார்டுகளிலும் தேர்தல் நடக்கிறது.இந்த வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களிடம் ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் தேர்தல் நெருக்கத்தில் காணாமல் போய்விட்டது. தேர்தலில் நில்லுங்கள், எல்லாவற்றையும் மேலிடம் பார்த்துக்கொள்ளும் என ஆசைவார்த்தை கூறிய முக்கிய நிர்வாகிகள், ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என அதிமுக வேட்பாளர்கள் புலம்புகின்றனர். கடந்த 10 ஆண்டுகாலத்தில் அமைச்சராக, எம்எல்ஏவாக, கூட்டுறவு சங்க தலைவர்களாக பதவி சுகத்தை அனுபவித்தவங்க எல்லாம், நகர்ப்புற தேர்தலில் கடமைக்கு வராங்க, கையெடுத்து கும்பிடுறாங்க அவ்வளவுதான் என விரக்தியடைந்துள்ள அதிமுக வேட்பாளர்கள் திக்குத்தெரியாத காட்டில் சிக்கியதை போல தவிக்கின்றனர்.இந்த மாவட்டத்தில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முக்கூர் சுப்பிரமணியன், எஸ்.ராமச்சந்திரன், சேவூர் ராமச்சந்திரன் என 4 முன்னாள் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதோடு, தூசி மோகன், ஜெயசுதா, அரங்கநாதன், பன்னீர்செல்வம், குணசீலன், அன்பழகன், பாபு முருகவேல், சுரேஷ்குமார் என முன்னாள் எம்எல்ஏக்களுக்கும் பஞ்சமில்லை. ஆனாலும், நகர்ப்புற தேர்தலில் பூத் செலவுக்குகூட ஆதரவு கரம் நீட்டாமல் முக்கிய புள்ளிகள் கைவிரித்துவிட்டனராம். அதனால், வேறு வழியின்றி சொந்த செல்வத்தையும், செல்வாக்ைகயும் நம்பி வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கின்றனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில், உருண்டு புரண்டாலும் ஒரு இடத்திலும் சேர்மன் பதவியை பிடிக்க முடியாது, எதுக்கு செலவழிக்கணும் என்று  அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவரே வெளிப்படையாக கமெண்ட் அடித்திருப்பது வேட்பாளர்களின் வேதனைையை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது.கட்சிக்கு ஒற்றை தலைமை இருந்தபோது, சம்பாதித்த பணத்தில் கொஞ்சமாவது தேர்தல் நேரத்தில் செலவழிப்பாங்க. இப்போது இரட்டை தலைமை. யாரிடம் புகார் சொன்னாலும் எதுவும் நடக்கப்போறதில்லை என விரக்தியின் உச்சத்தில் உள்ளனர் கிரிவல மாவட்ட அதிமுக வேட்பாளர்கள்….

The post பதவியை ருசித்தவர்கள் பதுங்கிக்கொண்டனர் விரக்தியின் விளிம்பில் அதிமுக வேட்பாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Thiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலையில் உயிர் பிரிய...