×

“நான் முதல்வன்” திட்டத்தில் ரயில்வே, வங்கி பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி: கலெக்டர் ஆர்த்தி தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், ரயில்வே மற்றும் வங்கி பணியாளர் போட்டி தேர்வுகளுக்கு “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படுகிறது என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளாகிய பணியாளர் தேர்வாணையம் ரயில்வே தேர்வு குழுமம், வங்கி பணியாளர் தேர்வு குழுமம் உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றிபெற தேவையான இலவச பயிற்சியினை வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை, தமிழகத்தை சார்ந்த போட்டித் தேர்வர்கள் பெருமளவில் பங்குகொண்டு வெற்றிபெறும் நோக்கில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இப்பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்கப்பட்டு 3 மாத காலங்களுக்கு நடைபெறவுள்ளது. இப்பயிற்சியானது மேற்கண்ட தேர்வுகளுக்கு சிறந்த முறையில் வழங்க இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி சிறப்பாக வழங்கப்பட உள்ளது.

எனவே, இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 044-27237124 வாயிலாக தொடர்பு கொண்டு தங்கள் பெயரினை முன்பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகிவரும் காஞ்சிபுரம் மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post “நான் முதல்வன்” திட்டத்தில் ரயில்வே, வங்கி பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி: கலெக்டர் ஆர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில்...