வால்பாறை, நவ.24: தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரிவு மாநில தலைவர் வால்பாறை அமீது விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் 30.7.2021 அன்று குறைந்தபட்ச கூலி ரூ.425.40 அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 15.9.2021 அன்று தொழிற்சங்கங்கள் சார்பில் தனியார் எஸ்டேட் நிர்வாகங்களிடம் இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் 1.8.2021 முதல் தனியார் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவை தொகை பெற்று தரப்பட்டது. இதன் மூலம், தமிழ்நாட்டில் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
அதே சமயம் தமிழகத்தில் உள்ள டேன்டீ அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அமைந்துள்ள சிங்கோனா, நடுவட்டம், குன்னூர், நீலகிரி ஆகிய இடங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கான சம்பள நிலுவை தொகை ஒரு குடும்பத்திற்கு ரூ.80 ஆயிரம் வரை வழங்க வேண்டியுள்ளது.இந்த நிலுவை தொகை டேன்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்காமல் உள்ளது. தொழிற்சங்கத்தினருடன் ஏற்படுத்திய ஒப்பந்த அடிப்படையில் இந்த சம்பள நிலுவை தொகையை தனியார் தேயிலை தோட்டங்களுக்கு முன் உதாரணமாக டேன்டீ நிர்வாகம் வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
The post தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவை தொகை வழங்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.