×

திருவாடானை அருகேபயன்பாடில்லா சுகாதார வளாகம்

திருவாடானை, பிப்.4: திருவாடானை அருகே சேதமடைந்து பயன்பாடின்றி கிடக்கும் மகளிர் சுகாதார வளாகத்தை இடித்து அகற்ற வேண்டுமென அப்பகுதியினர் கோரியுள்ளனர். திருவாடானை அருகே குஞ்சங்குளம் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த அதிமுக ஆட்சியில் இந்த சுகாதார வளாகம் உரிய பராமரிப்பு இன்றி பயன்பாடு இல்லாமல் இருந்தது. இதனால் கட்டிட வளாகத்தின் உள்பகுதியில் முட்டிதர்கள் மண்டி மரங்கள் வளர்ந்து அதன் வேர்கள் கட்டிடத்தை சேதப்படுத்தின. மேலும், இந்த சுகாதார வளாகத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கழிவறைகளில் உள்ள கதவுகள் உடைந்து பயன்பாடின்றி கிடக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் இப்பகுதியில் பெய்த தொடர் கனமழையால் இந்த சுகாதார வளாகத்தின் கட்டிட சுவர்களில் மழைநீர் இறங்கியது. இதனால் விரிசல் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன்படி பயன்பாடின்றி முட்புதர்கள் மண்டிக்கிடக்கும் இந்த கட்டிடத்தில் இரவு நேரங்களில் சிலர் மது அருந்திவிட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். எனவே பயன்பாடில்லா சுகாதார வளாகக் கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவாடானை அருகேபயன்பாடில்லா சுகாதார வளாகம் appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Kunjankulam ,
× RELATED திருவாடானை அருகே புதிய ரேஷன் கடை கட்டுமானப் பணி ஸ்பீடு