×

தண்டவாளம் புதுப்பித்தல், வேகம் அதிகரித்தல் குறித்து திருச்சி கோட்ட ரயில் பாதையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு

திருச்சி தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் திருச்சி கோட்டத்தில் தண்டவாளம் புதுப்பித்தல், சிக்னல், இன்ஜினியரிங் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் ரயில்வே தண்டவாளம் புதுப்பித்தல், சிக்னல் மற்றும் இன்ஜினியரிங் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. மேலும், அதிவேக ரயில்களின் வேகம் அதிகப்படுத்தும் விதமாகவும் பணிகள் நடப்பதால் இந்த பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேற்றுமுன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் திருச்சி கோட்ட மேலாளர் மனீஷ்அகர்வால், கோட்ட வணிக முதுநிலை மேலாளர் செந்தில்குமார், கோட்ட இயக்குதல் மேலாளர் ஹரிகுமார், கோட்ட பொறியாளர் அஜய் குமார் மீனா உ்ளளிட்டோர் உடனிருந்தனர். இதில், முதற்கட்டமாக விழுப்புரம் – திருச்சி இடையிலான ரயில்வே லைனில் உளுந்தூர்பேட்டை – பூவானூர் இடையே நடந்து வரும் தண்டவாள பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர், விருத்தாசலம் ரயில் நிலையம் சென்ற ஆர்.என்.சிங், அங்கு அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின்கீழ் பயணிகளுக்கான மேம்பாட்டு வசதிகள் செய்து வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த முதுநிலை திட்ட மேலாளர் அசோக்குமாரிடம் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து, திருச்சி வந்த ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், ரங்கம் – பொன்மலை பிரிவு இடையிலான காவிரி ஆறு ரயில்வே தண்டவாளத்தில் பாலத்தின் பக்கவாட்டு இரும்புபடி வழியே இறங்கி பில்லரில் நின்று, தண்டவாளத்தின் இணைப்புகள் மற்றும் பாலத்தின் தூண், இணைப்பு பேரிங் உள்ளிட்டவை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்த பொது மேலாளர் ஆர்.என்.சிங், அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் 2வது நுழைவு வாயில், புதிய பிளாட்பாரம் அமைக்கும் பணிகள், நடைமேடை, தானியங்கி நடைமேடை உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து பயணிகளுக்கும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மற்றும் அவர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று திருச்சி கோட்ட மேலாளர் மனீஷ்அகர்வால் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மதுரை கோட்டத்தில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்ய சென்றார்.

 

The post தண்டவாளம் புதுப்பித்தல், வேகம் அதிகரித்தல் குறித்து திருச்சி கோட்ட ரயில் பாதையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : General Manager ,Southern Railway ,Trichy Kota ,Trichy Southern Railway ,RN Singh ,Trichy Division.… ,Trichy ,Division ,Dinakaran ,
× RELATED நாமக்கல் ரயில்வே கூட்ஷெட்டை 12 மணி நேரம் செயல்பட நடவடிக்கை