×

சென்னையில் மூன்று சாலைகளுக்கு வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, காமராஜர் பெயர்களை மீண்டும் வைக்க வேண்டும்: தலைமை செயலாளரிடம் திமுக எம்பிக்கள் கடிதம்

சென்னை: திமுக எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சனிடம் ஒரு கடிதம் அளித்தனர். பின்னர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது: 1969ல் அண்ணா மறைந்தவுடன், அன்றைய முதலமைச்சர் கலைஞர், சென்னை மாநகரத்தின் பிரதான சாலையாக இருந்த மவுண்ட் ரோடு என்று அழைக்கப்படும் சாலைக்கு அண்ணா சாலை என்று பெயர் சூட்டினார். சின்னமலையில் இருந்து செயின்ட் தாமஸ் வரை மவுண்ட் ரோடு என்றும் கலைஞர் பெயர் சூட்டினார். 1975ம் ஆண்டு காமராஜர் மறைந்தவுடன், அதுவரை கடற்கரை சாலை என்று அழைக்கப்பட்டு வந்த சாலைக்கு காமராஜர் பெயரை  சூட்டினார். 1979ம் ஆண்டு பெரியார் நூற்றாண்டு விழா நடந்த நேரத்தில் அன்று முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், பூந்தமல்லி ஹைரோடு என்று இருந்த சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்று பெயர் சூட்டினார்.ஆனால் 4 நாட்களுக்கு முன்பாக நெடுஞ்சாலை துறை அறிவிப்பு பலகையில் பெரியார் ஈ.வெ.ரா. சாலைக்கு கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்றும், அண்ணா சாலை, காமராஜர் சாலை பெயரை அகற்றுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிந்ததால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் தமிழக அரசு சார்பில் எந்த விளக்கம் தரவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இதுகுறித்து அறிக்கை வெளியிட்டார். அதற்கு பிறகும் அரசு தரப்பில் இருந்து யார் செய்தது, எப்படி வந்தது என்று விளக்கம் தராததால் இன்று திமுக சார்பில் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு மனு கொடுக்க அனுப்பி வைத்துள்ளார். மூன்று சாலைகள் மட்டுமல்ல, கலைஞர்தான் மகாபலிபுரம் சாலைக்கு மாமல்லபுரம் சாலை என்று மாற்றினார். இந்த சாலையின் பெயரை மகாபலிபுரம் சாலை என மாற்றியுள்ளனர். இந்த 4 சாலைகள் சென்னையை ஒட்டியுள்ள பிரதான சாலைகள். மூன்று தலைவர்களின் பெயர் மறைக்கப்பட்டது ஏன்? யாரை திருப்திப்படுத்துவதற்காக செய்துள்ளார்கள் என்பது தெரியவில்லை.தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக திமுக சார்பில் தலைமை செயலாளரிடம்  மனு கொடுத்துள்ளோம். அதில், ஏற்கனவே மூன்று சாலைகளுக்கு வைக்கப்பட்டிருந்த தமிழக தலைவர்களின் பெயர்களை மீண்டும் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். தமிழக பாஜ தலைவர் முருகன் வரலாறு தெரியாமல் பேசுகிறார். அப்போது அவர் பிறந்துகூட இருக்க மாட்டார். அவருக்கு வேண்டுமானால் கண்ணாடி வாங்கி கொடுக்கிறேன். 1969ல் இருந்து வரலாற்றை படித்துவிட்டு வரட்டும். ஆவணத்தில் இருக்கிறது என்று தலைமை செயலாளரே ஒத்துக் கொண்டார். திராவிட இயக்க உணர்வு உள்ள உண்மையான தமிழர்களுக்கு தான் இதுபற்றி தெரியும் என்றார்….

The post சென்னையில் மூன்று சாலைகளுக்கு வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, காமராஜர் பெயர்களை மீண்டும் வைக்க வேண்டும்: தலைமை செயலாளரிடம் திமுக எம்பிக்கள் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Periyar ,Anna ,Kamaraj ,Chennai ,DMK MPs ,chief secretary ,DMK ,RS Bharti ,B. Wilson ,N. R. Ilango ,Rajeev Ranjan ,General ,Secretariat ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலய முகப்பில் திமுக...