×

சீராக குடிநீர் வழங்கக் கோரி கோவில்பட்டியில் மக்கள் மறியல்

கோவில்பட்டி, ஜூன் 6: சீராக குடிநீர் வழங்கக் கோரி கோவில்பட்டியில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 20வது வார்டு பகுதியான எட்டயபுரம் சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிகளுக்காக அங்கு இருந்த குடிநீர் இணைப்பு குழாய் மாற்றி அமைக்கப்பட்டது. அந்த குடிநீர் குழாய் இணைப்பு உயரமாக வைத்து இருப்பதால் வீடுகளுக்கு சீராக தண்ணீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் 20வது வார்டு பாஜ நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார் தலைமையில் நேற்று எட்டயபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு வார காலத்திற்குள் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post சீராக குடிநீர் வழங்கக் கோரி கோவில்பட்டியில் மக்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலி