புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகளால் இயக்கப்படும் 25 சதவீத ஏடிஎம்களில், மோசடிக்கு வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.சமீபகாலமாக வங்கி ஏடிஎம் தொடர்பான மோசடிகள் அதிகரித்துள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து வங்கிகள் தங்களது சாப்ட்வேரை காலத்திற்கு ஏற்ப தரம் உயர்த்திக் கொள்ளவும், புகார்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகள் தொடர்பான கேள்விக்கு நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலில், ‘பொதுத்துறை வங்கிகளால் இயக்கப்படும் கால்வாசி ஏடிஎம் இயந்திரங்கள், முழு பாதுகாப்பானதாக இல்லை. அவை மோசடிக்கு ஏதுவானதாக உள்ளன. மேலும் 74 சதவீத ஏடிஎம்கள் பழமையான சாப்ட்வேரில் இயங்குகின்றன. போதுமான அளவுக்கு அடிப்படை பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் இந்த ஏடிஎம்களில் மோசடி நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தனியார் வங்கிகளின் ஏடிஎம்களில் மோசடிக்கு வாய்ப்பு உள்ளதா என்ற விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நாட்டில் 89 சதவீத ஏடிஎம் இயந்திரங்களை, அரசு உதவியுடன் பொதுத்துறை வங்கிகள் இயக்கி வருகின்றன. இருப்பினும் சமீபகாலமாக தனியார் நிறுவனங்கள் அதிகளவு ஏடிஎம்களை நிறுவி வருகின்றன. ஆனாலும் 70 சதவீத பொதுத்துறை வங்கிகள் வர்த்தகம் மற்றும் கடன், பணம் பெறுதலில் ஈடுபடுகிறது. கடந்த 2017 ஜூலை முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான காலத்தில் வங்கி புகார்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு சுமார் 25 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. இவை பெரும்பாலும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பானது. இந்த காலக்கட்டத்தில 861 கோடி ரூபாய்க்கு பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!