சென்னை: கொரோனாவால் உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குமாறு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார். “கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கடந்த வருடம் ஏப்ரல் 15ஆம் தேதி திமுக உள்ளிட்ட 11 கட்சிகளின் கூட்டணியினர் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம், ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தமிழக அரசு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தது என கூறினார். ஆகவே, உடனடியாக முதலமைச்சர் உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க உத்தரவிடக் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.