இந்தியாவில் அதிகரித்து வரும் நீரிழிவு, உடல் பருமன் மற்றும் உயர்ரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சனைகளுக்கு, நகர்ப்புற உணவுப் பழக்கங்களால் குடல் பாக்டீரியாவில் ஏற்படும் மாற்றங்களே முக்கியக் காரணம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கட் மைக்ரோப்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின்படி, பீட்சா, துரித உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்வதால், குடலில் மெகாமோனாஸ் என்ற வகை பாக்டீரியாக்கள் அதிகமாகப் பெருகுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் தரவுகளின்படி, இந்தியாவில் 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 8.98 கோடி பெரியவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 43 சதவீதம் பேர் தங்களுக்கு நீரிழிவு இருப்பதே தெரியாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனிதர்களின் பரம்பரை மரபணுக்களைவிட அவர்கள் வாழும் சூழல் மற்றும் உட்கொள்ளும் உணவுப் பழக்கங்களே குடல் பாக்டீரியாக்களின் தன்மையையும், அவற்றின் ஆரோக்கியத்தையும் அதிகமாக நிர்ணயிக்கின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
