கோவை, ஜூன் 25: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் சிறுவாணி, பில்லூர், பவானி, ஆழியாறு, அமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட பிரதான குடிநீர் திட்டங்கள் இருக்கிறது. மழையின் காரணமாக இந்த நீர் திட்டங்களில் வழங்கப்படும் குடிநீரின் தரம் தீவிரமாக கண்காணிக்க குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் பிரதான அலுவலக நீர் தேக்க தொட்டிகள் ராமகிருஷ்ணாபுரம், காந்திபார்க், கணபதி, பாரதிபார்க் உள்ளிட்ட நீர் தேக்க தொட்டிகளில் குளோரினேசன் கேஸ் முறையில் குடிநீர் சப்ளையாகிறது.
ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் உள்பட அனைத்து குடிநீர் திட்டங்களிலும் குளோரின், படிகாரம் கலப்பு சரியாக இருக்க வேண்டும். குடிநீரால் நோய் பரவல் தடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரியத்தினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘ குடிநீரில் தாதுப்பொருட்கள் அளவு மாறி வருகிறது. ஆய்வகங்களில் குடிநீரில் இரும்பு சத்து உள்பட அனைத்து வகையான தாதுக்களின் அளவுகளை சரி பார்த்து வருகிறோம். ஆயிரம் லிட்டர் குடிநீருக்கு 4 கிராம் குளோரின் கலந்து சப்ளை செய்யவேண்டும். உள்ளாட்சிகளும் நீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மக்கள் குடிநீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கலாம். குடிநீர் குழாய் பழுதுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், ’’ என்றனர்.
