×

லக்னோவில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி

லக்னோ: உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பூர்ணியா என்ற இடத்தில் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். வணிக வளாகம் ஒன்றில் மேல் கட்டடத்தில் தான் இந்த பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

சம்பவ தினமான இன்று அந்த வளாகத்தில் தீப்பிடித்தது. முதலில் மெதுவாக பற்றிய தீ, மளமளவென கட்டடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. தீப்பிடித்ததை அறிந்த பயிற்சி மைய மாணவர்கள் அலறினர். என்ன செய்வது என்று தெரியாமல் பீதியில் தவித்த அவர்கள், தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள மாடியில் இருந்து குதித்தனர்.

இந்த தகவலறிந்த உள்ளூர் மக்கள் தீயணைப்புத் துறைக்கும், போலீசாருக்கும் தெரிவித்துவிட்டு கட்டடத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றனர். இந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சிறிது நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

தீயில் சிக்கியவர்களில் மொத்தம் 11 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணி முழு வீச்சில் நடக்கிறது. கட்டடத்தை கரும்புகை சூழ்ந்துள்ளதால், பணிகள் தாமதம் ஆகி வருகின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Lucknow ,Lucknow, Uttar Pradesh ,Purnia ,
× RELATED உத்தரப்பிரதேசத்தில் பிரபல ரவுடி லல்லன் சிங் சுட்டுக்கொலை