கோழிக்கோடு: கேரள மாநிலத்தில் மீண்டும் ஒருவருக்கு நிஃபா வைரஸ் (Nipah Virus) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வௌவால்கள் பரவும் இந்த தொற்று தற்போது கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த 43 வயதான நபருக்கு முதற்கட்ட சோதனையில் கண்டறியப்பட்டு உள்ளது.
குடோன் ஒன்றில் பாதிக்கப்பட்ட நபர் வேலை பார்த்து வந்த நிலையில், அங்கிருந்த வௌவால்கள் மூலம் இந்தத் தொற்று அவருக்குப் பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர் தற்போது கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் இறுதி உறுதிப்படுத்தலுக்காக புனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனத்திற்கு (NIV) அனுப்பப்பட்டுள்ளன. மேலும் நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும் மருத்துவ கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தொற்று பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று மாநில சுகாதார துறை கூறியுள்ளது.
