ஐதராபாத்: மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேடு மாவட்டத்தைச் சேர்ந்த அவிநாஷ் இர்பாஜி கல்னே (37), கடந்த 2013ம் ஆண்டு சோனி என்கிற கோமல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், சுமார் 8 ஆண்டுகள் இவர்களது வாழ்க்கை எவ்வித பிரச்னைகளும் இன்றி மகிழ்ச்சியாக சென்றது. காலப்போக்கில் மது பழக்கத்திற்கு அடிமையான அவிநாஷ், குடும்ப பொறுப்புகளை கவனிக்காமல் மனைவி கோமலின் நடத்தையில் அடிக்கடி சந்தேகம் அடைந்து தகராறு செய்துள்ளார்.
இதனால் குடும்பத்தை நடத்த கோமல் வீட்டு வேலைக்கு சென்ற நிலையில், ஒரு தகராறில் தனது மனைவியை கொலை செய்ய முயற்சி செய்ததாக அவிநாஷ் மீது ஒரு கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அவிநாஷ், பிழைப்பு தேடி தனது குடும்பத்துடன் ஐதராபாத்தின் அட்டாப்பூர் தேஜஸ்வினி நகருக்கு குடிபெயர்ந்து அங்கு ஆட்டோ டிரைவர் மற்றும் கட்டிட வேலைகளை செய்து வந்துள்ளார்.
ஐதராபாத் வந்தும் அவிநாஷின் சந்தேகம் குறையாத நிலையில், கடந்த 4ம் தேதி இரவு மீண்டும் தம்பதியரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து கட்டிட உரிமையாளர் மற்றும் கோமலின் சகோதரர் அதனை சமரசம் செய்து வைத்துள்ளனர். ஆனால் ஆத்திரம் குறையாத அவிநாஷ், நேற்று முன்தினம் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த கோமலை இரும்பு கம்பி மற்றும் காய்கறி வெட்டும் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். அண்டை வீட்டினர் ஓடி வருவதைக் கண்ட அவிநாஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பலத்த காயமடைந்த கோமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அட்டாப்பூர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி 24 மணி நேரத்திற்குள் அவிநாஷை கைது செய்தனர். அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, இரும்பு கம்பி மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ‘மனைவி மீது கொண்ட சந்தேகத்தால் இந்த கொலையை செய்ததாக அவிநாஷ் ஒப்புக்கொண்டுள்ளார்’ என்று போலீசார் தெரிவித்தனர்.
