திருச்சி, ஜூன் 9: நவல்பட்டு பகுதி குடியிருப்புவாசிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நவல்பட்டு ஐடி பார்க் செல்லும் வழியில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் 100 அடி சாலை அமைந்துள்ளது. இந்த பாதையை ஐடி ஊழியர்கள், விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் என ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சாலையில் இருபுறங்களிலும் போதிய மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. சமூக விரோத செயல்கள் அப்பகுதியில் அதிகமாக நடைபெறுகிறது. இதுகுறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இந்த 100 அடி சாலையில் மின்விளக்கு அமைத்து பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
