×

“குதிரை பேரம் செய்யும் தவெக”- அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த உடனே தவெகவில் இணைந்ததை கண்டித்து தமிழ்நாடு பாஜக அறிக்கை

சென்னை: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த உடனே தவெகவில் இணைந்ததை கண்டித்து தமிழ்நாடு பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில்;
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, தான் ஒரு தூய சக்தி என்றும், மற்றக் கட்சியினர் தீய சக்தி என்றும் பிரச்சாரம் செய்தார். அப்படியான நிலையில், 108 தொகுதிகளில் வெற்றிப்பெற்று முதல்வர் ஆக முடியாமல் அவர் சாடிய திமுக வின் தோழமைக்கட்சிகளுடன் பேசி ஆதரவுப் பெற்று முதல்வர் பதவிக்கு வந்தார். அது மட்டும்மல்லாமல் அஇஅதிமுக வில் வெற்றிப்பெற்ற சட்டமன்ற உறுபினர்களையும், திருட்டு தனமாக அரசியல் புரோக்கர்களை வைத்து, குதிரை பேரம் பேசி, சட்டமன்றத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமாக தனது வலுவை நிரூபித்தார்.

நேற்றைக்கு அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினமா செய்ய வைத்துவிட்டு, தன்னுடைய கட்சியிலும் சேர்த்துக் கொண்டார். இதில் என்ன நியாயம் இருக்கிறது! ராஜினாமா செய்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடந்தால், மக்களின் வரிப்பணம்தானே வீணாகிறது என்று முதல்வர் ஜோசப் விஜய் அறியாமல் இருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. வேடிக்கை என்னவென்றால், நேற்று ராஜினாமா செய்த 3 அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், “முதல்வர் ஜோசப் விஜயின் ஆட்சி 10 நாட்களிலேயே மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியைப்போல இருக்கிறது” என்றும் கூறி, இதற்காகத்தான் தவெக கட்சியில் சேர்ந்தோம் என்றும் கூறியுள்ளார்கள். இது எவ்வளவு வேடிக்கையான, முட்டாள்தனமான பேச்சு.

இவர்கள் எப்படி தலைமைச்செயலகத்தில் ஒரு அமைச்சர் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் சேரமுடியும்? தலைமைச் செயலகம் என்ன தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகமா? இந்த அடிப்படைக்கூட தெரியாமல் ஒரு அறிவிலி அமைச்சர் இருக்கிறாரே? மேலும், இன்ஸ்டாகிராம் Influencers களை வைத்து, ஏமாற்றி, எளிதாக ஆட்சிக்கு வந்த திரு. விஜய் அவர்களுக்கு எப்படி அரசியல் பக்குவம் இருக்கும்? அதுமட்டுமல்லாது குதிரைபேரத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகின்ற ஜோசப் விஜய் எப்படி தூயசக்தி ஆவார்? ஜோசப் விஜயின் ஆட்சி 15 நாட்களிலே அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சியைப்போன்று இருக்கிறது என்று சொல்லுகிறார்களே? 15 நாட்களில் தமிழகத்தில் நடந்த அவலங்களைப் பாருங்கள்.

  • ஜோசப் விஜய் ஆட்சிக்கு வந்த 15 நாட்களில் 266 குற்றச்சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன.
  • 45 படுகொலைகள் நடந்துள்ளன.
  • 66 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குகெதிரான குற்றங்கள் நடந்துள்ளன.
  • 74 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன.
  • 82 ஊழல் குற்றங்கள் நடந்துள்ளன.

“போதைப்பொருள்களை ஒழிப்பேன்” என்று சொன்னார் ஜோசப் விஜய். இன்றுவரை பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் போதைப்பொருள்கள் நடமாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறதே! அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்கடன் தள்ளுபடி செய்கிறேன் என்று சொன்ன ஜோசப் விஜய் விவசாய பெருங்குடி மக்களையும் ஏமாற்றி இருக்கிறார். அவர் அறிவித்தப்படி முழுமையாக பயிர்கடன் தள்ளுபடி செய்யவில்லை. இது அவர்கொடுத்த வாக்குறுதியை மீறியதாகும்.

மேலும், கடந்த 2 நாட்களிலேயே திரு. ஜோசப் விஜய் அவர்கள் சிறுபான்மை ஆட்சியில்,

  • திருவண்ணாமலையில் 14 வயது சிறுமி,
  • கோவையில் 10 வயது சிறுமி,
  • விழுப்புரம் வண்டிப்பாளையத்தில் 11 வயது சிறுமி,
  • மதுரையில் 10 ஆம் வகுப்பு மாணவி,
  • நாகப்பட்டினத்தில் 80 வயது மூதாட்டி ஆகியோர் கொடூரமாக பாலியல் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லுவாரா முதல்வர்..?

இவரது ஆட்சியில் நடக்கும் அவலங்களைப் பார்த்தால், மகாகவி பாரதி பாடிய, “நெஞ்சுப் பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்” என்ற துயரப்பாடல்தான் நினைவிற்கு வருகிறது. இப்படியாக, தமிழக மக்களை வருத்தம் அடையச் செய்யும் அளவிற்கு, சிறுபான்மை அரசின் முதல்வர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஜோசப் விஜய் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் வருத்தம் அடையும்படி செய்து விட்டார் என்பது வேதனைக்குரியது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu BJP ,Davega ,Adimuka ,Chennai ,Adimuka Assembly ,Tamil Nadu ,Chief Minister ,Josef Vijay ,
× RELATED பணவீக்கம், எரிபொருள் விலை உயர்வு...