×

திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி: சக மாணவிகள் மறியல்

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி இறந்தார். அவரது இறப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சக மாணவிகள் 4 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா தொண்டைமான் நல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி கலைச்செல்வி. விவசாய கூலி தொழிலாளர்கள். இவர்களது மகள் சீதாலட்சுமி(19). இவர் திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் அரசு செவிலியர் (நர்சிங்) கல்லூரியில் மூன்றாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார். இந்த கல்லூரியில் 3 ஆண்டுகளையும் சேர்த்து 350க்கும் மேற்பட்ட மேற்பட்ட மாணவிகள் நர்சிங் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாணவி சீதாலட்சுமிக்கு மூக்கில் சதை வளர்ச்சி பாதிப்பு இருந்தது. இதற்காக அவர் தான் படிக்கும் திருச்சி அரசு மருத்துவமனையிலே பரிசோதனை செய்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக மூக்கில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். ​இதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு மூக்கில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்தது. முன்னதாக அவருக்கு அதிகாலை மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. சிறிது நேரத்திலேயே மாணவி திடீரென உயிரிழந்தார்.

​இதனால் மாணவியின் பெற்றோர், உறவினர்கள், சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். காலை 7.30 மணியளவில் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் முன் திரண்டு நர்சிங் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிக அளவில் மயக்க மருந்து கொடுத்ததால் தான் சீதாலட்சுமி இறந்துள்ளார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையே சீதாலட்சுமியின் உயிரிழப்பிற்கு காரணம். எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்து, கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

இந்நிலையில் சுமார் 40 மாணவிகள் ஒரு பிரிவாக பிரிந்து, மருத்துவமனையில் இருந்து கலெக்டர் அலுவலகம் சென்றனர். அங்கு கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களிடம் ஆர்டிஓ சாலை தவவாளன், துணை போலீஸ் கமிஷனர் சிருஷ்டி சிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புகார் கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர்.

இதனிடையே மருத்துவமனையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த மாணவிகளில் 50க்கும் மேற்பட்டோர் ரோட்டில் மறியல் செய்ய வெளியே ஓடி வந்தனர். இதைப்பார்த்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மெயின் கேட்டை மூட முயன்றனர். ஆனாலும் மாணவிகள் முண்டியடித்துக்கொண்டு மெயின் ரோட்டுக்கு வந்து அரசு மருத்துவமனை முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனிடையே கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திரும்பிய மாணவிகளும், அரசு மருத்துவமனைக்குள் இருந்த எஞ்சிய மாணவிகளும் மறியலில் கலந்து கொண்டனர். சுமார் 200 மாணவிகள் காலை 8 மணியில் இருந்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், மருத்துவமனை முதல்வர் குமரவேல் நேரில் வந்து சீதாலட்சுமி இறப்புக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

இந்நிலையில் துணை சபாநாயகர் ரவிசங்கர், அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ், கலெக்டர் சரவணன், திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், போலீஸ் துணை கமிஷனர் சிருஷ்டி சிங், கல்லூரி டீன் குமரவேல் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் 4 மணி நேரத்துக்கும் மேல் போராட்டம் நீடித்தது. தவறு செய்த மருத்துவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து நடவடிக்கை எடுக்க மாலை 6 மணி வரை அதிகாரிகள் அவகாசம் கேட்டனர். இதனால் மறியலை கைவிடுவதாகவும், ஆனால் மாலை வரை இங்கு தான் இருப்போம் என்று கூறி மாணவிகள் பகல் 12 மணி முதல் மருத்துவமனை நுழைவு கேட் ஓரத்தில் அமர்ந்துள்ளனர். மாணவிகள் போராட்டத்தால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவிகள் அங்கேயே அமர்ந்திருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவு
சீதாலட்சுமி மரணம் தொடர்பாக விசாரிக்க சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் என்.பாஸ்கர் தலைமையில் உயர் மட்ட குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழு விசாரித்து அறிக்கையை அரசிடம் அளிக்கும். அதனடிப்படையில் மருத்துவர்கள் மீது தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகளுக்கு மிரட்டல்
மறியலில் ஈடுபட்ட மாணவிகள் கூறுகையில், சீதாலட்சுமி நேற்றே இறந்து விட்டார். இன்று காலை தான் அவர் இறந்ததாக கூறுகின்றனர். போராட்டத்தை கைவிடாவிட்டால் மாணவிகளின் மதிப்பெண்களில் கை வைப்பதாக மருத்துவமனை நிர்வாகம் மிரட்டுகிறது. போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதால், இன்னும் 50 மாணவிகளை வெளியே விடாமல் அவர்களது அறைகளில் பூட்டி வைத்துள்ளனர் என்றனர்.

2 பேர் மயக்கம்
திருச்சி அரசு மருத்துவமனை முன் போராட்டம் நடத்திய மாணவிகளில் 2 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். காலை முதல் சாப்பிடாமல் இருந்ததால் மயங்கியதாக கூறப்பட்டது. அருகில் இருந்த மாணவிகள் தண்ணீர் கொடுத்து, 2 பேரையும் தேற்றினர். ஆனாலும் 2 மாணவிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலட்சியமே காரணம்
போராட்டத்தில் ஈடுபட்ட 5க்கும் மேற்பட்ட மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சீதாலட்சுமியை இழந்து விட்டோம். இதற்கு அரசு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என்று அவர்கள் புலம்பினர். இவர்களது அழுகை, காண்போரையும் கண் கலங்க செய்தது.

Tags : Trichy Government Hospital ,Trichy ,Pudukkottai District ,
× RELATED ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்...