×

2028-ஆம் ஆண்டு கோடை ஒலிம்பிக் – தமிழகத்திலிருந்து தகுதியான விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து அனுப்ப நடவடிக்கை… அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்

சென்னை: மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவர்கள் தலைமையில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், இன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாண்புமிகு விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மூலம் அவர்களை சாதனையாளர்களாக மாற்றிட தொலைநோக்கு செயல்திட்டங்களை வகுத்து வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கவழக்கங்களிலிருந்து இளைஞர்களை நல்வழிப்படுத்திடும் ஒரு பகுதியாக விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்.

மேலும் இனிவரும் காலங்களில் ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து இளைஞர்களை பங்கேற்க செய்து பதக்கங்களை வெல்ல தொலைநோக்கு செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த செயல்திட்டத்தினை விரைவில் எட்டும் வகையில் விளையாட்டுத் துறை, விளையாட்டு சங்க நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக இதெற்கென நாள்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் விளையாட்டுத் துறை தொடர்பான கோரிக்கைகள் குறித்து எவ்வித சிரமமின்றி என்னை சந்திக்கலாம் என அமைச்சர் ஆதவ் தெரிவித்துள்ளார்.

தெடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ், ஒரு விளையாட்டு வீரராக இருந்த எனக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கியுள்ளார்கள். இதனால் விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் முன்னேற்றத்திற்கு என்னென்ன தேவை குறித்தும் விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்கு, விளையாட்டு சங்கங்களின் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு எந்த வகையில் அமைய வேண்டும் என்பது குறித்தும் நன்கு தெரியும் என்பதால் அரசுத் துறை நிர்வாகத்துடன் இணைந்து தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உலக அரங்கில் வெற்றியாளர்களாக உருவாக்க முடியும். இதற்கு விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமானதாகும். மேலும் விளையாட்டு சங்கங்களின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு சங்கங்களை ஒருங்கிணைத்திட விளையாட்டு மேம்பாட்டுத் துறையில் ஒருங்கிணைப்பு அலுவலரை நியமிக்கப்படவுள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டில் ஒலிம்பிக் பவன் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை செயல்படுத்தும் வகையில் அடுத்த 3-4 ஆண்டுகளில் கட்டிமுடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாநிலம் முழுவதும் அறியப்படாமல் உள்ள திறமையான இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து பயிற்சியளிக்கும் வகையில் திறனாய்வு குழு அமைக்கப்படவுள்ளது. மேலும் வரும் 2028-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து பதக்கங்கங்கள் பெற வாய்ப்புள்ளவர்களை இப்பொழுதே கண்டறிந்து அவர்களை வெற்றியாளர்களாக திகழச்செய்திட விளையாட்டுத் துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கேற்று, பதக்கங்களை பெற தொடங்கும் நிலையில் தற்போது இருப்பதை விட அதிக அளவிலானோருக்கு விளையாட்டின் மீது ஆர்வம் வரத்தொடங்கிவிடும். இதெற்கென செயல்திட்டங்களை நாம் இனைந்து கொண்டுவரவேண்டும். இதன் மூலம் தமிழ்நாடு விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக இதை நாம் செயல்படுத்தலாம்.

அதேபோன்று இனிவரும் காலங்களில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் அதிக அளவில் நடத்திடவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதற்கென பிற நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருகைபுரியும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தங்கும் வசதிகள் உள்ளிட்ட உலக தரத்திலான உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது அவசியமானது. தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்த மினி ஒலிம்பிக் போட்டிகள் நடத்திடவும், பெண்களை விளையாட்டு போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்க செய்திடவும், தமிழ்நாட்டிலிருந்து தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள நெடுந்தூரம் பயணிக்கும் விளையாட்டு வீரர்களின் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு அவர்கள் விமானத்தில் சென்று வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் தெரிவித்தார்.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் திரு. சஜ்ஜன்சிங் ரா சவான், இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு. ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு. ரா. சுமன், பொது மேலாளர் திருமதி. எல். சுஜாதா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : Tamil Nadu ,2028 Summer Olympics ,Minister ,Aadav Arjuna ,Chennai ,Honourable Minister of Public Works and Sports ,Chennai Neru Indoor Playground ,Honourable Minister of Sports ,
× RELATED பாலியல் புகாரில் நடவடிக்கை...