சென்னை: தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவிற்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் நேற்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில்;
தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரும், திரைப்பட விநியோகிப்பாளருமாக தனது தனித்துவமான பங்களிப்பை நல்கியவருமான கே. ராஜன் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
திரைப்படத் துறையின் நலன், குறிப்பாக சிறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்களின் உரிமைகள் மற்றும் தமிழ் சினிமாவின் போக்கு குறித்து தொடர்ந்து துணிச்சலுடன் தனது கருத்துகளை வெளிப்படுத்தி வந்தவர் கே. ராஜன். பல தசாப்தங்களாக திரைப்படத் துறையுடன் நெருங்கிப் பயணித்த அவரது பங்களிப்புகள் நினைவுகூரத்தக்கவை. அவரது பங்களிப்பை திரைத்துறை என்றும் நினைவில் வைத்திருக்கும்.
கே. ராஜனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும், தமிழ் திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.
