×

விழாக்கோலம் பூண்டது மதுரை: இனிதே நடைபெற்றது மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. நாளை மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மீனாட்சி அம்மன் மதுரை மாநகரின் ஆட்சிப் பொறுப்பேற்கும்விதமாக நேற்று முன்தினம் பட்டாபிஷேகம் நடைபெற்றது. நேற்று மீனாட்சி அம்மன், சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வான திக்கு விஜயம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் கோலாகலமாக நடைபெற்றது.

இதற்காக கோயிலுக்குள் வடக்கு – மேற்கு ஆடி வீதி சந்திப்பில் ரூ.30 லட்சம் செலவில் சுமார் 10 டன் எடையுள்ள பல வண்ணப்பூக்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆர்கிட், கொடைக்கானலின் கார்னேசன், ஜெர்புரா, கோல்டன்ராடு, ஆஸ்கரஸ் ஆகிய பூக்களை கொண்டு மேடை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வண்ண, வண்ண பட்டுத்துணிகளாலும் மேடைக்கு மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் காண்பதற்கு வசதியாக மேற்கு ஆடி வீதியில் 700 அடி நீளத்திற்கும், வடக்கு ஆடி வீதியில் சுமார் 700 அடி நீளத்திற்கும் பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது.

20க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கல்யாணத்தை முன்னிட்டு, மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் குவிந்துள்ளனர்.

திருக்கல்யாணத்திற்காக ரூ.500, ரூ.200 கட்டணத்தில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. மீனாட்சி திருக்கல்யாணத்தை காண தெய்வானையுடன் முருகப்பெருமானும், தங்கை மீனாட்சியை தாரை வார்த்துக் கொடுப்பதற்காக பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றத்தில் இருந்து நேற்று இரவே மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். போலீஸ் கமிஷனர் அபிஷேக் தீக்‌ஷித் தலைமையில் 10 எஸ்பிகள் உட்பட 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். திருக்கல்யாணத்தையொட்டி மதுரை திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

Tags : Madurai ,Meenakshi ,Sundareswarar Thirukalyana ,Sundhareswarar Thirukalyana ,Madurai Chitra Festival ,Masi ,Madurai Meenakshi Amman Temple Chitra Festival ,Meenakshi Amman ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் 62 மையங்களில் 4ம்...