- இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
- பங்களாதேஷ் பெண்கள்
- சமாரி அட்டபட்டா
- ராஜ்ஷாஹி
- வங்காளதேசம் பெண்கள் அணி
- வங்காளம்
ராஜ்சாகி: வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் நேற்று, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் வங்கதேசம் வென்ற நிலையில் 2வது ஒரு நாள் போட்டி, ராஜ்சாகியில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய வங்கதேச அணியின் துவக்க வீராங்கனைகள் ஜுவய்ரியா பெர்தூஸ் 2, சர்மின் சுல்தானா 25 ரன் எடுத்து அவுட்டாகினர்.
பின் வந்தோரில் கேப்டன் நிகர் சுல்தானா சிறப்பாக ஆடி 101 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால், 45.5 ஓவரில் வங்கதேசம், 165 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேசம் தரப்பில் சமாரி அத்தப்பட்டு 3 விக்கெட் வீழ்த்தினார். அதையடுத்து, 166 ரன் இலக்குடன் இலங்கை மகளிர் களமிறங்கினர். துவக்க வீராங்கனைகளில் ஒருவரான ஹாசினி பெரேரா 5 ரன்னில் அவுட்டானார்.
மற்றொரு துவக்க வீராங்கனை கேப்டன் சமாரி அத்தப்பட்டு 39 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். பின் வந்தோரில் ஹர்சிதா சமரவிக்ரமா 50 ரன் எடுத்தார். 38.2 ஓவரில் இலங்கை அணி, 6 விக்கெட் மட்டுமே இழந்து 166 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகியாக இலங்கை கேப்டன் சமாரி அத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியை அடுத்து, 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.
