கல்லூரி மாணவி நதியா சோமுவை அருண்குமார் சேகரன் காதலிக்கிறார். ஆனால், அவரது காதலுக்கு நதியா சோமுவின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை என்பதை அறிந்து, தனது நண்பர்களின் மூலம் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறார். இதை அறிந்து வருத்தப்பட்ட நதியா சோமு, இனிமேல் அவர் குடிக்கக்கூடாது என்று ப்ராமிஸ் செய்ய சொல்கிறார். இந்நிலையில் ஒரு பெண்ணை அருண்குமார் சேகரன் காப்பாற்ற, அதை பார்த்து தவறாக நினைக்கும் நதியா சோமு, காதலனை விட்டு விலகுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
படத்தின் இயக்குனரும், ஹீரோவுமான அருண்குமார் சேகரன், இயல்பான நடிப்பினால் அசத்தியுள்ளார். குடிக்கும் காட்சியிலும், எச்ஐவி வந்த பிறகு வருத்தப்படுகிற காட்சியிலும் அவர் நடிப்பு கவனிக்க வைக்கிறது. நதியா சோமு தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், குணா, சுந்தரவேல், கார்த்திக் ஸ்மித், ராஜா, டாக்டர் இவின், ராஜ்குமார், கலைவாணி உள்பட பலர் கேரக்டருக்கேற்ப நன்கு நடித்துள்ளனர்.
வினோத் குமார் ஒளிப்பதிவு, வேலூர் மாவட்டத்தை கண்முன் கொண்டு வந்திருக்கிறது. தீபச்செல்வன் இசையில் பாடல்கள் ஈர்க்கின்றன. ஸ்ரீராம் விக்னேஷ் எடிட்டிங் கச்சிதமாக இருக்கிறது. புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளை குறைத்திருக்கலாம். மது போதையில் முடிவெடுக்கும் மனநிலை குறித்த விழிப்புணர்வை படம் ஏற்படுத்தியுள்ளது. ஹீரோ அருண்குமார் சேகரன், இயக்குனராகவும் தேறியிருக்கிறார்.
