×

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. இயற்கை வென்றது என அன்புமணி ராமதாஸ் கருத்து

சென்னை: கர்நாடகத்தில் காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபினியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிவதையடுத்து அங்கிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக அறிக்கை மூலம் கருத்து தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இயற்கை வென்றுள்ளது, கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பதை போல கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்தும் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

கபினி நீர் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு திறக்கப்படும், தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருக்குமா? என்பதெல்லாம் அடுத்த சில வாரங்களுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்வளவு மழை பெய்யும் என்பதைப் பொறுத்தே அமையும். எனினும் இயற்கையின் கொடையால் தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறக்கப்படுவது நிம்மதியளிக்கிறது என்று கூறி இருக்கிறார்.

கபினி அணை நிரம்புவதற்கு இன்னும் 3 அடியும், 2 டி.எம்.சி நீருமே தேவை என்ற நிலையில், வினாடிக்கு 11747 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பிற்பகலில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் நாளைக்குள் அணை நிரம்பி விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாகவே நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது இயற்கையின் கொடையே தவிர கர்நாடக அரசின் விருப்பம் அல்ல.

ஒருவேளை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தால் கபினி அணையிலிருந்து தண்ணீர் வருவதும் நிறுத்தப்பட்டு விடும். அதனால் தமிழகத்திற்கு பயன் கிடைக்காது. இன்னொரு அணையான ஹாரங்கி நிரம்பி வழிவதால் அதிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அடுத்த சில நாள்களில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று தெரிகிறது.

எனவே, வெள்ளம் போல் வரும் கூடுதல் நீரை சேமித்து வைக்க வசதியாக கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் தமிழ்கத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும். அதை இன்னும் ஒரு வாரத்திற்கு தொடருவதன் மூலம் தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.

Tags : Kapini Dam ,ANBUMANI RAMADAS ,NATURE ,Chennai ,Kabini ,Kaviri ,Karnataka ,Pamaka ,
× RELATED மின்கட்டண கணக்கீட்டில் வேறுபாடுகள்...