சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் விஜயை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: தற்போதைய 2025-2026ம் ஆண்டிற்கான அதிக புதிய முதலீடுகளை ஈர்த்த டாப் 10 மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் 10வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. நமது மாநிலத்தின் தொழில் முதலீடுகள் எந்தளவிற்கு நலிவடைந்துள்ளன என்பதற்கான சான்றாக விளங்கும் இந்த தகவலை, தற்போதைய தவெக அரசாவது சற்று தீவிரமாகக் கையாள வேண்டும். புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் சோடை போயுள்ளது.
பெரிய பெரிய நிறுவனங்களும் பிற மாநிலங்களை நோக்கி படையெடுக்கின்றனர். எனவே, பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கும் போக்கை கைவிட வேண்டும். இணைப்பு வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள், கடன் வசதிகள், மானியங்கள், சட்ட அனுமதிகள் ஆகியவற்றை எளிதாக்கி, மேம்படுத்தி புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென முதல்வர் ஜோசப் விஜயை வலியுறுத்துகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
