- தமிழ்நாடு அரசு
- கேரளா
- முதல் அமைச்சர்
- வி. டி. சதிஷன்
- திருவனந்தபுரம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- விஜய். டி. சதிஷன்
திருவனந்தபுரம்: “தமிழ்நாடு அரசின் புதிய விதிகளால் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் ஜல்லிக்கற்கள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை உள்ளிட்ட பல பணிகளின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டு, திட்டங்கள் தாமதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் வி.டி.சதீஷன் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும் கேரள முதல்வர் வி.டி.சதீஷன் அனுப்பியுள்ள கடிதத்தில்; “கேரளாவும் தமிழ்நாடும் புவியியல் நெருக்கம், கலாச்சார பிணைப்பு மற்றும் நீண்டகால பரஸ்பர கூட்டுறவு ஆகியவற்றின் அடிப்படையில் உருவான தனித்துவமான, நிலையான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. நமது இரு அரசுகளும் நமது மக்களின் நலன் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகக் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகின்றன. கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் செயல்படுத்துவதைப் பாதிக்கும் மிக முக்கியமான ஒரு பிரச்சனையில், தங்களின் தனிப்பட்ட தலையீட்டைக் கோருவதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன்.
தமிழ்நாடு அரசு, 09.07.2026 நாளிட்ட அரசிதழ் அறிவிக்கை எண்: 306-ன் மூலம், கற்கள் (rough stones) மற்றும் பிற கட்டுமானப் பொருட்களின் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தைக் முறைப்படுத்தும் விதிகளைக் கொண்டுவந்துள்ளது என்பதை நான் அறிவேன். இதன் காரணமாக, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்குக் ஜல்லி கற்கள் கொண்டு செல்வது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான ஜல்லி கற்களுக்கான முக்கிய ஆதாரமாக இம்மாநிலத்தின் எல்லை மாவட்டங்களே பாரம்பரியமாக விளங்கி வருகின்றன.
தாங்கள் அறிந்தது போல, பெரிய அளவிலான உள்கட்டமைப்பு பணிகளுக்குத் தேவையான பொருத்தமான ஜல்லி கற்களின் இருப்பு கேரளாவில் மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, தற்போது நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குத் தேவையான கணிசமான அளவிலான பொருட்கள் தமிழ்நாட்டின் பக்கத்து மாவட்டங்களில் இருந்தே பெறப்படுகின்றன. மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தின் மீதான இந்தக் கட்டுப்பாடுகள் விநியோகச் சங்கிலியைப் பாதித்து, கட்டுமானப் பணிகளை முடக்கியுள்ளன; மேலும், உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களை முடிப்பதில் கடுமையான காலதாமதம் ஏற்படும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளன.
இந்த தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் கேரளாவுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த தென்னிந்திய பிராந்தியத்திற்கும் மிக முக்கியமானவை ஆகும். இவை பிராந்திய இணைப்பு வசதியை வலுப்படுத்தும், தளவாடக் கையாளுகை திறனை (logistics efficiency) மேம்படுத்தும், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை எளிதாக்கும், மேலும் நமது இரு மாநிலங்களிலும் உள்ள முக்கியமான பொருளாதார மையங்களுக்கான அணுகலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இவை விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் துறைமுகம் மற்றும் வல்லார்பாடம் சர்வதேச கொள்கலன் முனையத்திற்கும் தடையற்ற இணைப்பை வழங்கும்; இதன் மூலம் தென்னிந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் போட்டித்தன்மைக்கும் கணிசமான பங்களிப்பை அளிக்கும்.
தங்கள் அரசின் கொள்கைக்குப் பின்னால் உள்ள நோக்கங்களையும், இயற்கை வளங்களை நிலையான முறையில் மேலாண்மை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நான் முழுமையாக உணர்கிறேன். அதே வேளையில், தமிழ்நாடு அரசின் கொள்கை நோக்கங்களில் சமரசம் செய்யாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்களின் நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு சீரான அணுகுமுறையைக் கண்டறிய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இப்பின்னணியில், கேரளாவில் தற்போது நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பிற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மட்டும் பிரத்யேகமாகத் தேவைப்படும் ஜல்லி கற்களைத் தடையின்றிப் கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில், உரிய விலக்குகள் அளிப்பது அல்லது தகுந்த ஒரு நடைமுறையை உருவாக்குவது குறித்துப் பரிசீலிக்க தங்களின் கனிவான தலையீட்டைக் கோருகிறேன். இத்தகைய நடவடிக்கை இத்திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்யப் பெரிதும் உதவுவதுடன், நமது இரு மாநிலங்களுக்குமிடையே எப்போதும் நிலவும் கூட்டுறவு உணர்வை மேலும் வலுப்படுத்தும்.
இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண்பதில் தங்கள் அரசு முழு ஒத்துழைப்பை நல்கும் என்று நான் நம்புகிறேன். தங்களின் கனிவான பரிசீலனையையும் சாதகமான பதிலையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
