பாட்னா: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து பீகாரின் பாட்னாவில் தொடர் போராட்டங்கள் நடக்கின்றன. இதுதொடர்பாக பந்த் போராட்டத்திற்கு இடதுசாரி மாணவர் அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த பந்த் போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், தேஜ் பிரதாப் யாதவை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரம் பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கைது சட்டவிரோதமானது என்றும், கைது செய்யப்பட்ட பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தேஜ் பிரதாப் யாதவின் வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். இதற்கு ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் செயல் தலைவரும் தேஜ் பிரதாப் யாதவின் சகோதரருமான தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்து, பந்த் ஆதரவாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் மாநிலம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.
