ஐநா: அமைதியான முறையில் போராட்டம் நடத்த விரும்பும் மக்கள் எந்தவித அச்சமுமின்றி போராட அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஐநா கருத்து தெரிவித்துள்ளது. ஐநா பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டரெஸின் செய்தித் தொடர்பாளரான ஸ்டீபன் டுஜாரிக் பேசுகையில், ‘‘டெல்லியில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து நாங்கள் நன்கு அறிவோம்.
அமைதியான வழியில் போராட்டம் நடத்த விரும்பும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கைது செய்யப்படுவோம் என்ற பயமோ, காயமடைவோம் என்ற அச்சமோ அல்லது அச்சுறுத்தலோ இன்றி தங்களது கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும். டெல்லியில் நடக்கும் சம்பவங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.
அமைதியான முறையில் தங்களது ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்தும் மாணவர்கள் மீது அத்துமீறல்கள் நடத்தப்படக் கூடாது’’ என்றார். சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகமான மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு மாணவர்கள் மீது நடத்திய தடியடிக்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
