×

வண்டல் மண் எடுப்பதில் விதிமீறல்

போச்சம்பள்ளி, ஜூலை 23: போச்சம்பள்ளி தாலுகாவில், விதிமீறி வண்டல் மண் எடுப்பதால் நீர்நிலைகள் பாழாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகாவில் விவசாயத்திற்காக, ஏரிகளில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்று விட்டு, அதனை வணிக ரீதியில் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள ஏரிகளில் அதிகாரிகள் அனுமதி பெற்று அரசாங்க விதிகளின்படி விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமே ஏரி மற்றும் குட்டைகளில் வண்டல் மண் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஏரிகளில் அள்ளும் வண்டல் மண் விவசாய நிலங்களுக்கு செல்லவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். விவசாயத்தின் பெயரால் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
`அரசு குறிப்பிட்ட அளவுகளில் மண் அள்ளாமல் அடிப்பகுதியில் உள்ள நொரம்பு மண்ணையும் எடுத்துச் செல்வதால் நீர் நிலைகள் பாழாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் ஏரிகள் நிரம்பும்போது, பெரும் பாதிப்பு உருவாகும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி, மண் கடத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Pochampally ,Pochampally taluka ,Pochampally taluka, ,Krishnagiri district ,
× RELATED ஓசூர் மாநகராட்சியில் வாடகை செலுத்தாத 9...