×

குதிரை பேரம் குறித்த அனைத்து புகார்கள் மீதும் சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் தவெக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. தவெக 107 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் அதிமுகவில் இருந்து 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துள்ளனர். மேலும் பலரிடம் அமைச்சர் பதவி தருவதாகவும், மீண்டும் சீட் தருகிறோம், ரூ.50 கோடி தருகிறோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. அதேபோல திமுகவில் உள்ள சிலரிடமும் பேரம் பேசப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. மேலும், திருவல்லிக்கேணி போலீசில், தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ஆதரவு தரவேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் முன்ஜாமீன் பெற்றனர்.

இந்தநிலையில்தான் திருப்பூரைச் சேர்ந்த ஜெ.பாலசுப்பிரமணி என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், புகார் அளித்து 5 நாட்களுக்கு பின் வழக்கு பதிவு செய்ததும், புகார் கிடைக்கப் பெறும் முன்பே ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டதும், பேரம் பேசியதாக கூறப்படும் நிகழ்வு ஊத்தங்கரையில் நடந்த போது, திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறை உள்ள போது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணைந்தது, மதிமுகவைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யுமாறு முதல்வர் விஜய் தெரிவித்ததாக வைகோ பேட்டியளித்தது, திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், சீனிவாசன் ஆகியோர், தங்களை ராஜினாமா செய்யும்படியும், பதிலுக்கு அமைச்சர் பதவியும், 50 கோடி ரூபாயும் வழங்குவதாக ஆளுங்கட்சி அமைச்சரே பேரம் பேசியதாக தெரிவித்தது, கைது செய்த தன்னை தவெகவில் இணையும் படி போலீசார் நிர்பந்தித்ததாக திமுக எம்.எல். ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தது போன்ற புகார்கள் மீதும் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். ஜனநாயக நடைமுறையையும், மக்கள் தீர்ப்பையும் பாதுகாக்க இந்த விவகாரத்தில் நியாயமான, சுதந்திரமான விசாரணை தேவை என்பதால், இதுசம்பந்தமாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவெக எம் எல்.ஏ.விடம் பேரம் பேசியது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி, தமிழகத்தில் நடந்து வரும் குதிரை பேரங்களை கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஊத்தங்கரையில் இருந்து சென்னை வந்து எம்.எல்.ஏ. அளித்த புகார் மீது வழக்குப்பதிவு

Tags : CBI ,Chennai ,Othankari Taveka M. L. A. A ,Chennai High Court ,Thiruvallikeni ,Tamil Nadu ,Daveka ,Takeka ,
× RELATED ஆந்திர கடல் எல்லையில் தமிழக மீனவர்கள்...