நெடுநாள் கூட்டணி கட்சிக்கே துரோகம் செய்துவிட்டு வேறு கூட்டணிக்கு வெட்கமில்லாமல் ஓடிய சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்: தமிழக காங்கிரஸ் கட்சியை அமமுக ஐடி விங் கடுமையாக விமர்சனம்

சென்னை: அமமுக ஐடி விங் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒட்டுண்ணி உயிரினங்களில் தமிழக காங்கிரசையும் சேர்க்க வேண்டும். 50 ஆண்டுகளாக பிரதான திராவிட கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்தே, தனது இருப்பை காட்டி கொண்டு வருகிறது. இப்பொழுதும் கூட காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் இருக்கும் எம்பிக்களும், எம்எல்ஏக்களும் திமுக தொண்டர்களின் கடுமையான உழைப்பினால் வெற்றி பெற்றவர்கள், பச்சையாக சொல்ல வேண்டுமெனில் அவை திமுக இட்ட பிச்சை, அதில் பலன் அடைந்தவர்களில் வாய்சவடால் வீராசாமி மாணிக் தாகூரும் ஒருவர் என்பதை மறந்துவிட்டார் போல.

நெடுநாள் கூட்டணி கட்சிக்கே துரோகம் செய்துவிட்டு, வேறு கூட்டணிக்கு வெட்கமில்லாமல் ஓடிய சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு, தனக்கு இழைக்கப்பட்ட இன்னல்களை மறந்து தமிழக மக்களுக்காக பரந்தமனப்பான்மையோடும், கூட்டணி தர்மத்திற்காகவும் இன்று வரை களமாடும் எங்கள் தலைவரை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?

அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்டவர்களுக்கு, சொந்த காலில் நிற்கும் எங்கள் தலைவரை பார்த்தால் எரிச்சலாய் தான் இருக்கும். அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது, உங்களின் தன்மையை நீங்கள் தான் மாற்றிக் கொள்ள வேண்டும்.அதுபோகட்டும், மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட வைக்க விடமாட்டோம் என வாய்சவடால் பேசினீர்களே, ஆனால் உண்மையில் அங்கு அணை கட்டும் பணிகள் நடப்பதை தமிழக விவசாயிகள் ஆதாரத்துடன் அம்பலபடுத்தினார்களே, அப்போது உங்கள் வாய்சவடால் எங்கே போனது மாணிக் தாகூர் அவர்களே?

மேகதாது அணை பிரச்சினைக்கு, உங்களின் புதிய கூட்டணியும், அதன் தற்போதைய அவதார நாயகரும், அம்மையார் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்தித்து பேசி, கர்நாடக காங்கிரஸ் அரசிற்கும், அணையை கட்டியே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் கர்நாடக முதலமைச்சருக்கும் உரிய அழுத்தம் கொடுத்து, தீர்வு காணும் தெம்பும் திராணியும் உங்களுக்கு இருக்கிறதா?

இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை, தமிழகத்தில் அமர்ந்துகொண்டு காவிரியை வைத்து அரசியல் செய்வதை நிறுத்தி விட்டு, உண்மையில் தமிழகத்தின் மீதும், காவிரி பிரச்சனையின் மீதும் அக்கறை இருந்தால் , சட்டத்திற்கு புறம்பாக கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாது அணையை கட்டவிடாமல் தடுத்து நிறுத்துங்கள் பார்ப்போம். அப்பொழுது உங்களை வாழ்த்தும் முதல் குரல் எங்கள் தலைவர் டிடிவி உடையதாக தான் இருக்கும், ஏனெனில் அவர் முன்னெடுப்பது மக்களுக்கான அரசியல்.

Related Stories: