×

நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

நாமகிரிப்பேட்டை, ஜூலை 14: நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் காரீப் பருவத்தில் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்மை அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், காரீப் பருவத்தில் பச்சை பயிறு, நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம், மரவள்ளி, மஞ்சள், வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு தாங்கள் சாகுபடி பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பயனடையலாம். அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற காப்பீடு நிறுவனம் மூலம் காப்பீடு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பச்சை பயிருக்கு பிரீமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.369ஐ வரும் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். சோள பயிருக்கு ரூ.184, நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.446 ஆகஸ்ட் 17க்குள் செலுத்த வேண்டும். மக்காச்சோள பயிருக்கு ஏக்கருக்கு ரூ.654ம், பருத்திக்கு ரூ.563ஐ அக்டோபர் 16க்குள் செலுத்த வேண்டும்.

சின்ன வெங்காயத்திற்கு ரூ.1750, தக்காளிக்கு ரூ.1857, மரவள்ளிக்கு ரூ.630, மஞ்சள் ரூ.4149, வாழை ரூ.1911 ஆகியவற்றிற்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் இதர வங்கிகள், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கடன் பெறும் விவசாயிகள் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் உறுதிமொழி கடிதம் அளித்து பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், கைப்பேசி எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பாக கூடுதல் விவரங்களை, பயிர் காப்பீடு இணையதள முகவரியில் அல்லது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Namakiripettai district ,Namakiripettai ,Kharif ,Assistant Director of ,Agriculture, Agriculture and Farmers Welfare Department ,Kavitha ,
× RELATED நாமக்கல் மாவட்ட குறைதீர் கூட்டத்தில் 852 மனுக்கள் குவிந்தன