நெல்லை, ஜூலை 10: நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் வரும் 18ம் தேதி இரவு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு வைபவம் நடக்கிறது.
தேவார பாடல் பெற்ற தலமான நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆனித்தேரோட்ட திருவிழா, ஐப்பசி திருகல்யாணம் உள்ளிட்ட திருவிழாக்கள் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றம் அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் நேற்று காலை நடந்தது. முன்னதாக கொடி பட்டம் கோயில் பிரகாரம் வலம் வந்ததைத்தொடர்ந்து கொடியேற்றப்பட்டு கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
