இந்தூர்: மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மவு வரையில் பயணிகள் மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இங்கு ராவ் பகுதியில் ரங்வாசா என்ற சாலை அருகே ரயில் செல்லும்போது அதன் ஓட்டுநர், ரயிலை நிறுத்தி விட்டு, அங்கிருந்த சாலையோர உணவு கடைக்குள் சென்று சமோசா வாங்கி கொண்டு மீண்டும் ரயிலில் ஏறுவது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதைக்கண்ட இணையவாசிகள், சமோசா வாங்குவதற்காக ரயில்வே சீருடை அணிந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்தி பயணிகளுக்கு காலதாமதத்தை ஏற்படுத்தியதாகவும், ரயில்வே விதிகளை மீறி விட்டதாகவும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் சர்ச்சைக்குரிய இந்த சம்பவத்தை ரயில்வே வாரியம் மறுத்துள்ளது. இதுகுறித்து ரத்லம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி முகேஷ் குமார் கூறுகையில், “சமூக வலைதளங்களில் பரவுவது போல் அது பயணிகள் ரயில் அல்ல.
அது ஒரு சரக்கு ரயில். ரயில் நிறுத்தப்பட்ட சமயத்தில் அந்த தடத்தில் திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது. ரயில் செல்ல நேரமாகும் என்பதாலேயே அதன் லோகோ பைலட் கீழிறங்கி அருகில் இருந்த கடையில் சமோசா வாங்கி உள்ளார். எனவே சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை” என்றார்.
