விட்டு விட்டு பெய்யும் மழையால் வனப்பகுதி சாலையோரங்களில் பசுமையாக மாறிய மரங்கள்: இயற்கை அழகை ரசிக்கும் பயணிகள்

 

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த வனப்பகுதியில், அவ்வப்போது மழையால், ரோட்டோரம் பச்சை பசேலென மாறிய மரங்களால் இயற்கை அழகை பயணிகள் பார்த்து ரசிக்கின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் புலிகள்காப்பத்தில் உள்ள டாப்சிலிப், கவியருவி, சின்னக்கல்லார் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். சீசனை பொறுத்து ஒவ்வொரு முறையும் சுற்றுலா பயனிகள் வருகை அதிகளவில் இருக்கும். இதில் பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்புக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். கடந்த 2025 -ம் ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து பெய்தது. இதனால், இந்த ஆண்டில் ஜனவரி மாதம் வரையிலும் வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடி கொடிகள் உள்ளிட்டவை பச்சை பசேலென இருந்தது. அதன்பின், பிப்ரவரி மாதம் துவக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமானது.

அதிலும் கடந்த ஏப்ரல் மாதம் இறுதிவரை என 3 மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமானதால், வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடி கொடிகளில் இருந்து இலைகள் வாடி வதங்கியது. அதிலும் ஆழியார் சோதனை சாவடியிலிருந்து வால்பாறை மலைப்பாதைக்கு செல்லும் ரோட்டோரத்தில் உள்ள பல மரங்கள் பட்டுபோன நிலையிலும், செடி, கொடிகள் வாடி வதங்கிய நிலையிலும் இருப்பதை காண முடிந்தது. இதற்கிடையே, இந்த மாதம் துவக்கத்தில் வனப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்துள்ளது. இதனால், வாடி வதங்கிய மரங்கள், செடிக்கொடிகள் உள்ளிட்டவை புத்துணர்ச்சி பெற்று செழிக்க ஆரம்பித்தது. அதிலும், ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் தற்போது மீண்டும் பசுமை திரும்பி பச்சை பசேலாக ஏற்பட்டுள்ளது.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை பெய்ய அரம்பித்தாலும், ஆழியார் மற்றும் சர்க்கார்பதி, நவமலை பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்கிறது. தொடரும் மழையால் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாருக்கு மட்டுமின்றி, ஆழியார் வழியாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. இந்த தருணத்தில் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள், ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையோரம் பச்சை பசேலென உள்ள தாவரங்களை கண்டு ரசிப்பதுடன், இயற்கை சீதோஷ்ண நிலையை பார்த்து பரவசமடைகின்றனர். அடுத்து, கன மழை பெய்தால் வனப்பகுதியில் உள்ள தாவரங்கள் மேலும் செழிப்புடன் இருக்கும். இதனால் வரும் வாரங்களில் சுற்றுலா பகுதிகளுக்கு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என வனத் துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: