பெரம்பலூர்,ஜூலை.3: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இணைய வழி பொதுமாறுதல் கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. தமிழ்நாடு அரசுத் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் சார்பாக 2026- 2027ம் கல்வி ஆண்டிற்கான பணிநிரவல் மற்றும் பொதுமாறுதல் கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. இந்த கலந்தாய்வானது 16ம்தேதி வரை EMIS இணைய வழி மூலம் தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இதன்படி முதல்நாளான நேற்று (2ம்தேதி) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு பெரம்பலூர்- துறையூர் சாலையில் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) அலுவலகத்தில் நடை பெற்றது. இந்தக் கலந்தாய்வினை பெரம்பலூர் மாவட்டக் கல்விஅலுவலர் (தொடக்கக் கல்வி) (பொ) வேலு தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்டு இடங்களைத் தேர்வுசெய்த 13 பேர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று (3ஆம் தேதி) இடை நிலை ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு ஒன்றியத்திற்கு உள்ளாக காலையிலும், வருவாய் மாவட்டத்திற்கு உள்ளாக மதியமும் நடக்கும்.
