×

நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதாக புகார்; ஒன்றிய பாஜக அமைச்சர் மீது உரிமை மீறல் நோட்டீஸ்: சபாநாயகருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கடிதம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் தவறான தகவலை அளித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மீது உரிமைமீறல் நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளார். கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2025ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, பாஜக மூத்த தலைவரான ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில் இந்திய வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.

ஆனால், இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் விமானப்படையை சேர்ந்த ஒருவர் என 6 ஆயுதப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவருமான கே.சி.வேணுகோபால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். மக்களவை விதி 223ன் கீழ் அவர் அளித்துள்ள அந்த கடிதத்தில், ‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியது முற்றிலும் தவறானது மற்றும் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தும் செயலாகும். நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துவது மற்றும் தகவல்களை மறைப்பது ஆகியவை உரிமைமீறல் மற்றும் நாடாளுமன்ற அவமதிப்பு என்பதை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு அமைச்சர் மீது உரிமைமீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் எந்த இந்திய வீரரும் வீரமரணம் அடையவில்லை என்று கூறிவிட்டு, ஒரு வருடம் கழித்து 6 வீரர்களை இழந்துவிட்டோம் என படைகள் அறிவிப்பது எப்படி சாத்தியம், நாட்டை பாதுகாக்கும் சேவையில் உயிர்த்தியாகம் செய்த 6 வீரர்களின் குடும்பங்களுக்கும், ஒட்டுமொத்த ஆயுதப்படைகளுக்கும் இந்த தகவல் பெரும் அவமானமாகும். வீரர்களின் தியாகத்தை பற்றி ஒன்றிய அரசு பொய் சொல்லியுள்ளது’ என விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ‘கடந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை மட்டும் தனிமைப்படுத்தி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் எந்த இந்திய வீரரும் உயிரிழக்கவில்லை என அவர் கூறியதாக சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே தவறான தகவல் பரப்பப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Parliament ,Union BJP ,Congress ,New Delhi ,K.C. Venugopal ,Defence Minister ,Rajnath Singh ,Pahalgam terror attack ,
× RELATED உத்தரப் பிரதேசம்: ஆக்ரா-லக்னோ...