திருச்சி: விசிக தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல, இதை அதிமுக கட்சிக்குள் நடைபெறும் உட்கட்சி விவகாரமாக கடந்து செல்ல முடியாது. இது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. கூட்டணி கட்சிகளின் ஆதரவுமேல் நம்பிக்கை இன்றி தவெகவினர் அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைக்கிறார்களா என யூகமாக பதில் சொல்ல முடியாது.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் நேற்று கூட்டணி கட்சியினரை சந்தித்தார்கள். முறைப்படி அனைத்து ஆதரவு தருகிற கட்சிகள், அனைத்து தோழமை கட்சிகளுக்கும் இந்த அழைப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அனைவரையும் சந்திக்கிற ஒரு நிகழ்வாக இருக்கும். இதில் முதலமைச்சர் பேசுவார். தவெக கூட்டணிக்கு ஒரு முழுமையான வடிவம் கொடுக்கும் கூட்டமாக அது இருக்கலாம்.
கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும், இந்த எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. இடைத்தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கவில்லை, ஊடகங்களே பரப்புகின்றன. அமைச்சர் சரத்குமார் போதை பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அது உண்மையாக இருப்பின் அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
