கனடாவின் டொராண் டோ ஸ்டேடியத்தில் நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் ஐ பிரிவில் செனகல்-ஈராக் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 4வது நிமிடத்திலேயே செனகல் வீரர் ஹபீப் தியாரா முதல் கோல் அடித்தார். 12வது நிமிடத்தில் செனகலின் நட்சத்திர வீரர் சாடியோ மானேவை தட்டிவிட்டதற்காக, ஈராக் பின்கள வீரர் ரெபின் சுலாகாவுக்கு நடுவர் அந்தோணி டெய்லர் சிகப்பு அட்டை விதித்து வெளியேற்றினார். இதனால் ஈராக் 10 வீரர்களுடன் மட்டுமே விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
முதல் பாதியில் 1-0 என இருந்த ஆட்டம் 2வது பாதியில் செனகலின் அதிரடியால் கோல் மழையாக மாறியது. 56வது நிமிடத்தில் இஸ்மைலா சர் கோல் அடிக்க, மாற்று வீரராக களம் புகுந்த பப் குயே 58 மற்றும் 70வது நிமிடங்களில் அடுத்தடுத்து 2 உலகத்தரம் வாய்ந்த கோல்களை அடித்து அசத்தினார். 81வது நிமிடத்தில் இலிமான் நதியாயே தனது பங்கிற்கு கோல் அடித்தார். முடிவில் 5-1 என்ற கோல் கணக்கில் செனகல் அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பையில் ஆப்பிரிக்க நாடு பதிவு செய்த மிகப்பெரிய வெற்றிகளில் இதுவும் ஒன்று.
இந்த இமாலய வெற்றியின் மூலம் செனகல் குரூப் ‘I’ பிரிவில் சிறந்த கோல் வித்தியாசத்துடன் (+2) 3வது இடத்தைப் பிடித்து, ‘ரவுண்ட் ஆப் 32’க்கு தகுதிபெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஹாட்ரிக் தோல்வியுடன் ஈராக் அணி வெளியேறியது.
