×

வேலூர் சதுப்பேரியை தொடர்ந்து ஓட்டேரி, பலவன்சாத்து ஏரிகளை சுற்றுலா தலமாக்கும் திட்டம்

*கலெக்டர் நேரில் ஆய்வு

வேலூர் : வேலூர் சதுப்பேரி ரூ.19 கோடி மதிப்பீட்டில் கடந்த திமுக ஆட்சியின்போது தூர்வாரப்பட்டு, அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டதுடன், நடைபயிற்சி மேற்கொள்வதற்கான பாதை, இருக்கைகள், பூங்கா, சிறுவர்கள் விளையாடுவதற்கான அம்சங்களுடன் சுற்றுலா தலமாக்கப்பட்டது.

தற்போது அங்கு தினமும் மாைல வேளைகளில் மக்கள் பெருமளவு கூடி பொழுது போக்கி வருகின்றனர்.அதேபோல் வேலூரின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள ஓட்டேரியையும், பலவன்சாத்து ஏரியையும் சுற்றுலாதலமாக்கும் திட்டத்தை திமுக அரசு கையில் எடுத்தது. இதற்காக அப்போதையை கலெக்டர் சுப்புலட்சுமி ஓட்டேரி மற்றும் பலவன்சாத்து ஏரியையும் ஆய்வு மேற்கொண்டார்.

அதற்குள் சட்டமன்ற தேர்தல் மற்றும் பணியிட மாறுதல்களால் அத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது.இந்நிலையில் இத்திட்டத்தை மீண்டும் மாவட்ட நிர்வாகம் கையில் எடுத்துள்ளது.

அதன்படி நேற்று காலை கலெக்டர் லீலா அலக்ஸ் பலவன்சாத்து மற்றும் ஓட்டேரி ஏரிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் லட்சுமணன், சுகாதார அலுவலர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வின்போது ஓட்டேரிக்கான நிரந்தர நீர்வரத்து வாய்ப்புகள், என்னென்ன சிறப்பு அம்சங்களை சேர்ப்பது, அதேபோல் ஓட்டேரி நிரம்பினால் பலவன்சாத்து ஏரிக்கு செல்லும் கால்வாயை சீரமைப்பது, நீர்வரத்துக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது, பூங்காக்கள் அமைப்பது என பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து அரசுக்கு வேலூர் பலவன்சாத்து ஏரி, ஓட்டேரி ஆகிய 2 ஏரிகளை சுற்றுலா தலமாக்கும் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும். இப்பரிந்துரைகளை அரசு ஏற்கும்பட்சத்தில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். திட்ட அறிக்கை ஒப்புதலுக்கு பின்னர் தமிழக அரசின் பட்ஜெட்டில் இத்திட்டம் சேர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vellore Chatuperi ,Otteri ,Palavansathu ,Vellore ,Chatuperi ,DMK ,
× RELATED சட்டமன்றத்தில் என்னை தேடாதீர்கள்,...