புகையிலை பொருட்களுடன் காரில் தாறுமாறாக சென்ற வட மாநில வாலிபர்

 

திருமழிசை, ஜூன் 25: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே போக்குவரத்து நிறைந்த பகுதியில், நேற்றுமுன் தினம் கார் ஒன்று அதிவேகமாக வாகனங்களை இடித்துக்கொண்டு சென்றது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் காரை தடுத்து நிறுத்தி காரை ஓட்டி வந்த வடமாநில வாலிபரிடம் விசாரித்துள்ளனர்.அப்போது அந்த வாலிபர், பொதுமக்களிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வட மாநில வாலிபருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சிவகாஞ்சி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சிக்கி காயம் அடைந்திருந்த வட மாநில வாலிபரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில், காரில் 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சிவகாஞ்சி போலீசார் வட மாநில வாலிபரை கைது செய்து சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரையும் காரில் இருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: