*பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை
மதுரை : மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில், அடர்ந்த புதர்களுக்கு நடுவே பூட்டிகிடக்கும் கழிப்பறையை, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.மதுரை, தல்லாகுளம் கோகலே சாலையில், பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறையின் தென் மண்டல அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுமானம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு, நீர்வளத்துறையின் பெரியாறு – வைகை வடிநிலக்கோட்டம், பெரியாறு பிரதான கால்வாய் கோட்டம் உள்ளிட்டவற்றின் செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.
இங்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களின் வசதிக்காகவும், நீர்வளத்துறையின் திட்டம் மற்றும் வடிவமைப்பு உட்பிரிவில் பணிபுரியும் அதிகாரிகளின் பயன்பாட்டிற்காகவும், ஐந்தாண்டுகளுக்கு முன் கழிப்பறை கட்டப்பட்டது.
கட்டப்பட்ட சில ஆண்டுகள் வரை மட்டுமே பயன்பாட்டிலிருந்த இருந்த கழிப்பறை தற்போது, முழுமையாக புதர்மண்டியதுடன், பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறி பயன்படுத்த முடியாத நிலையில் கிடக்கிறது.
இதனால், இங்கு பணிபுரியும் ஊழியர்களும், மனு கொடுக்க வரும் பொதுமக்களும் இயற்கை உபாதைகளை கழிக்க மாற்று இடம் தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது.
பொதுப்பணி மற்றும் நீர்வளம் என, இருதுறைகளின் மண்டல பொறியாளர் அலுவலகங்கள் இங்கு இருந்தும், அடிப்படை வசதியை நிறைவேற்றுவதில் கூட இருதுறை அதிகாரிகளும் கவனம் செலுத்தாதது, பொதுமக்கள் மற்றும் ஊழியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இந்த கழிப்பறையைவிரைவாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று, அவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
