அமோனியா வாயுக் கசிவில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் ஆந்திராவில் உயிருடன் உள்ளார்: ஆதார் மோசடி அம்பலம்

திருவள்ளூர்: அம்மோனியா வாயு கசிவு குறித்த விசாரணையில், போலியான ஆதார் அட்டைகளை தொழிலாளர்கள் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் வாயு கசிவு சம்பவத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் ஆந்திராவில் உயிருடன் உள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இயங்கி வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், கடந்த 21ம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஏழு பேர் ஒடிசாவையும், இரண்டு பேர் அசாமையும் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த சம்பவத்தில் அரசு விசாரணையில் பல தொழிலாளர்கள் போலியான ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி வேலை செய்து வந்த மோசடி அம்பலம் ஆகியுள்ளது. தமிழகத்தில் வாயு கசிவு சம்பவத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண் ஆந்திராவில் உயிருடன் உள்ளார் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பூர்ணிமா ஜுவாங்கா என்ற ஒடிசா பெண், ஆந்திரப் பிரதேசத்தில் உயிருடன் பணிபுரிந்து வருவதும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டை அவருடையது அல்ல என்பதும் தெரியவந்துள்ளது.

இது தொழிலாளர்களைப் பணியமர்த்த மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆதார் அட்டை மோசடி குறித்து அரசு ஏற்கனவே விசாரித்து வருவதாகவும், இறந்தவரின் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு, தற்போது தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஸ்ரீகாந்த் ஜுவாங்கா மீது போலீசில் புகார் அளிக்கப்படும், பிறகு இந்த மோசடி குறித்து விசாரணையில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: