திருச்சி: கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்குத் தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு பாரபட்சமாக செயல்படுவதாகவும், கர்நாடகாவின் திட்டத்திற்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்தும், உடனடியாகத் மேகதாது அணை திட்டத்தைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் இன்று நூதன போராட்டம் நடத்தினர்.
சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மாம்பழச்சாலை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இறங்கி மணலில் புதைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒன்றிய அரசை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மேகதாது திட்டத்தை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
