சென்னை: நான் முதல்வன் எனும் என் கனவு திட்டத்தை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்து விடும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக ஆட்சியில், 2022ல், ‘நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது. அரசு பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலை மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை வளர்ப்பது. தற்போதைய உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பயிற்சி அளிப்பது போன்ற உதவிகள் வழங்கப்பட்டன. தற்போது அமைந்துள்ள தவெக அரசு, ‘நான் முதல்வன் திட்டத்தின் அதிகாரப்பூர்வ, ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் உள்ள பெயரை, ‘திறன் தமிழ்நாடு கார்ப்பரேஷன் என மாற்றியுள்ளது. அதோடு, மே 15ம் தேதிக்கு முந்தைய அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டு உள்ளன. இதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது:
நீங்கள் நான் முதல்வன் ேசாஷியா மீடியா பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை டெலிட் செய்யலாம். ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து டெலிட் செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன. கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் நான் முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
