சென்னை: தமிழகம் முழுவதும் 45 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் சோதனையை அறிந்த புரோக்கர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். லஞ்சம் அதிகமாக புழங்கக்கூடிய துறைகளில் போக்குவரத்து துறை மிகவும் முக்கியமானது. டிரைவிங் லைசென்ஸ் எடுக்கவும், வாகன தகுதிச்சான்று பெறவும், தினமும் பல்லாயிரக்கணக்கான பேர் இந்த அலுவலகங்களை தேடி வருகின்றனர்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு ரேட் என லஞ்சம் நிர்ணயிக்கப்பட்டு புரோக்கர்களால் வசூலிக்கப்படுகிறது. இதனையடுத்து மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் 45 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நடத்தப்படும் இந்த சோதனைகளில் ஏராளமான அலுவலர்கள், ஊழியர்கள், கணக்கில் வராத பணத்துடன் பிடிபட்டுள்ளனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவை, காந்திபுரம் ஒன்றிய ஆர்டிஓ அலுவலகம், திருப்பூர் தெற்கு,தென்காசி, நாகர்கோவில், திருநெல்வேலி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கரூர், கும்பகோணம், திருச்சி, செஞ்சி, சேலம் கந்தம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், காரைக்குடி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி உள்ளிட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் மாக்கமூலா பகுதியில் உள்ள போக்குவரத்து துறை பகுதி அலுவலகத்தில், டி.எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். கணக்கில் வராத 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
